logo
  • வணக்கம் நண்பர்களே!! நெமிரா நாவல்ஸ் உலகத்திற்கு உங்களை நட்புடன் வரவேற்கிறேன்! வாசித்து மகிழுங்கள்!!

மிருதன் 10.2

Naemira

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
193
Points
28
Location
india
அக்னிதீரனும், அஷோக்மித்ரனும் தங்கள் வீட்டின் கீழ்தளத்தின் வரவேற்பறையை நெருங்கிய நேரம், கையில் துப்பாக்கியுடன் சீருடை அணிந்திருந்த காவலாளிகள் ஓடிவந்து காரின் கதவைத் திறந்துவிட, அவர்கள் காரில் ஏறியதும் கதவை சாற்றிவிட்டு ஒருவன் மட்டும் காருக்கு முன்னால் வந்து ஏறிக்கொள்ள, அவர்கள் காருக்கு பின்னால் ஒரு காரில் இவர்களது பாதுகாவலர்களும் உடன் வந்தார்கள்.
காவலாளி தீரனை பார்த்து, “சார்” என்று இழுக்கவும், காரணம் உணர்ந்த அக்னி, “ஹோட்டல் ஆல்ஃபா போ!” என்று கூறிவிட்டு தன் தலையை பின்னால் சாய்த்து கண்களை மூடி அமர்ந்திருக்க, அஷோக்கோ அக்னி நிதானமாய் இருப்பதைக் கண்டு ஒன்று புரியாமல் கோபத்தில் அமர்ந்திருந்தான்.

மெல்லிய காற்றில் அசைந்தாடிய அவளது கூந்தல் அவனது முகத்தில் பட்டு உரசவும் மேனி சிலிர்த்தவன், தன் விழிகளை அழுத்தமாக மூடித் திறந்து மூச்சை நன்கு இழுத்து வெளியிட்டு, ‘இனியும் காலம் தாழ்த்தாதே ரித்து சொல்லிவிடு!’ என அவனது காதல் கொண்ட மனசு அவனுக்கு தைரியம் கொடுக்க, சுற்றும் முற்றும் அனைத்தையும் மறந்தவன், தன் காதலை சொல்ல ஆயத்தமானான்.
“என்ன பேசணும் அண்...” அவள் சொல்லி முடிப்பதற்குள், “ஐ லவ் யூ மேகா!” என்றான் ரிதுராஜ் அழுத்தமாக.
“வாட்?” அவளது கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. ரிதுராஜிடம் இருந்து இதை கொஞ்சமும் எதிர்பார்த்திராத மேகா, ஒன்றும் புரியாமல் திருதிருவென விழித்தாள். என்ன பேசுவதென்று அவளுக்கும் தெரியவில்லை, அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று அவனுக்கும் தெரியவில்லை.
அங்கு அதற்குமேல் நிற்காமல் மேகா வேகமாக நடந்தாள். அவள் அடித்திருந்தாலோ திட்டியிருந்தால் கூட அவனுக்கு ஒன்றும் தோன்றியிருக்காது. ஆனால் அவள் பதில் பேசாமல் போவதுதான் மிகவும் கஷ்டமாக இருந்தது.
பார்க்கில் பொதுமக்கள் நிறைந்திருக்க அவள் பின்னாலே ஓடிச்செல்ல சங்கடப்பட்டவன், அப்படியே அங்கிருந்த கல் மேசையில் தோய்ந்து அமர்ந்தான்.

அரைமணிநேர பயணம் அமைதியாக கழிய, அக்னியோ மேகாவை பற்றிய நினைப்பிலே கண்மூடி அமர்ந்திருந்தவன் இதழில், கண்டறிய முடியா சிறு புன்னகை எட்டிப் பார்த்தது.
சில மணித்துளிகளுக்குப் பிறகு, அக்னியின் ஜாக்குவார் தரையில் வழுக்கிக்கொண்டு அந்த பிரம்மாண்டமான நட்சத்திர விடுதியின் வாசலுக்கு முன்பு வந்து நின்றது.
“முக்கியமான கான்ட்ராக்ட்டை கேன்சல் பண்ணிட்டு, இங்கே கூட்டிட்டு வந்திருக்கான்” என்று முணுமுணுத்தபடி காரில் இருந்து இறங்கிய அஷோக், உள்ளே சென்று பார்த்தபொழுது தான் அனைத்தையும் புரிந்துகொண்டான்.
“அதானே தீரன்னா என்ன சும்மாவா?” என நண்பனை பெருமையுடன் பார்க்க, “உள்ள வாடா!” என சிறுபுன்னகையுடன் அஷோக்கை அழைத்த தீரன், நண்பனுடன் உள்ளே நுழைந்தான்.
அந்த ஹோட்டலில் உள்ள விசாலமான கான்ஃபரன்ஸ் அறையின் கதவை காவலாளி பவ்வியமாக திறந்துவிட, அக்னிதீரன் கம்பீரமாக உள்ளே நுழைய அவனை தெடர்ந்து அஷோக்மித்ரனும் தலைநிமிர்ந்து நுழைந்தான்.
அங்கே தீரன் வருவதற்கு முன்பே அவனுக்காக வந்து காத்திருந்த இத்தாலி முதலீட்டாளர்களை கண்டு அவன் முகம் பிரகாசமானது. அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்த கிரண் பாஸ்கரை கண்டு அவன் இதழ் இகழ்ச்சியில் விரிந்து கொண்டன.
அக்னிதீரனை இங்கே சற்றும் எதிர்பார்த்திராத கிரண் பாஸ்கரின் முகம் ஒருநொடி திகைப்பைக் காட்டி, பின்பு இயல்பை அடைந்தது. அவன் வெளியே காட்டிக்கொள்ளா விட்டாலும், முகத்தில் இருந்த பாறையை ஒத்த இறுக்கம் அவனது கோபத்தை தெளிவாய் காட்டியது.
அதை ரசித்தபடி வந்த தீரன், “சாரி ஜென்டில்மென், வெயிட் பண்ண வச்சிட்டேன்!” என்றபடி இத்தாலியர்களிடம் சென்று கை குலுக்க, “இட்ஸ் ஓகே தீரன், உங்க ப்ரோபோசல்காக எவ்வளவு நேரம் வேணும்னாலும் வெயிட் பண்ணலாம்” என ஆங்கிலத்தில் கூறியவர்கள் அவனை கட்டி அணைத்து வரவேற்றனர்.
பின்பு பாஸ்கரிடம் திரும்பிய தீரன், “ஹலோ பாஸ்கர்!” கபடமாய் புன்னகைத்து அவன் கரம்பிடித்து குலுக்கினான்.
வெளிநாட்டவன் முன்பு எதையும் காட்ட முடியாததால் நாகரிகம் கருதி, “ஹலோ தீரன்!” என கைப்பிடித்து குலுக்கினான் பாஸ்கர்.
தீரனின் பார்வையில் இருந்த நக்கல் அப்பட்டமாகத் தெரிய, பாஸ்கர் அவனை எரித்துவிடும் அளவுக்கு முறைக்க, அவனோ நல்ல பிள்ளையாக இத்தாலியாளர்களிடம் தொழில் பற்றி ஆங்கிலம் மற்றும் அவர்கள் தாய்மொழி கலந்து உரையாடினான்.
அவன் பேசப் பேச இத்தாலியர்களின் முகத்தில் தெரிந்த பிரகாசமே, ‘இந்த டீலை ஏற்கனவே தீரன் குறி வைத்துவிட்டான். இனி இந்த ப்ராஜெக்ட் தனக்கில்லை’ என்று பாஸ்கருக்கு நன்றாகப் புரிந்து விட்டது. ஆனாலும் புன்னகைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் பாஸ்கரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
“என்ன பாஸ்கர், ரொம்ப அதிர்ச்சியா இருக்கீங்க போல? இவன்தான் அடிபட்டு கிடந்தானே, இது எப்படி இவனுக்கு தெரியும்? நாமதான் இதை ரகசியமா வச்சிருந்தோமேன்னு ஆச்சரியமா இருக்கா?”
தீரன் பேசப் பேச பாஸ்கருக்கு ரத்தம் அழுத்தம் எகிறியது. அவனது அலட்சிய பார்வை, நக்கல் பேச்சில் பாஸ்கர் தன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“ஏன்டா, உனக்கு மட்டும்தான் ஸ்பை இருப்பாங்களா? ஏன் எனக்கு இருக்கமாட்டாங்களா?” என்று தீரன் புன்னகைக்கவும், பாஸ்கரின் முகம் கறுத்துப் போனது. அக்னியின் கபடச் சிரிப்பை பார்க்கப் பார்க்க அவனை இதே இடத்திலே ஏதாவது செய்ய வேண்டும் என்கின்ற வெறி பாஸ்கருக்கு வந்தது.
அங்கிருந்து எழுந்து செல்லவும் முடியவில்லை. காரணம், அடுத்தடுத்து இதே இத்தாலியர்களிடம் டீல் பேச வேண்டிய நிலை வரலாம். வெளிநாட்டவனை பகைக்கவும் முடியாது. ஆக நெருப்பின் மேல் நிற்பது போல நின்று கொண்டிருந்தான் பாஸ்கர்.
தனக்கு வரவேண்டிய டீலை தன் முன்னே தட்டிப் பறித்த அக்னியைக் கண்டு மனதிற்குள் பொருமினான். ‘எவ்வளவு அடித்தாலும் அதே கம்பீரத்தோடு எழுந்து நிற்கிறானே!’ கை முஷ்டி இறுகியது.
பிஸ்னஸ் உலகில் இது பெரிய தொல்லை. ஜென்ம பகையாளியாக இருந்தாலும், ஆயிரம் முறை வேண்டும் என்றால் முதுகில் குத்தலாம். ஆனால் வெளியில், நேருக்குநேர் சந்தித்தால் முகத்தில் புன்னகை மாறாமல் நட்பு பாராட்ட வேண்டும். அதைத்தான் இப்பொழுது பாஸ்கரும் செய்து கொண்டிருக்கின்றான்.
இத்தாலி ப்ராஜெக்டில் வெற்றிகரமாக கையொப்பம் செய்து முடித்துவிட்டு அவர்களை அஷோக்குடன் அனுப்பி வைத்த தீரன், பாஸ்கரிடம் திரும்பி, “என்ன பாஸ்கர், இப்போ புரிஞ்சிருக்குமே? நீ எனக்கு ஒரு மடங்கு வலிக்க வச்சா, நான் பல மடங்கு திருப்பி உனக்கு வலிக்க வைப்பேன்னு! நீ எனக்கு நூறு கோடி லாஸ் பண்ண வச்ச, இப்போ பாரு உனக்கு ஆயிரம் கோடி லாஸ்!” என்றவனை கண்டு பாஸ்கரின் கோபம் பன்மடங்கானது.
“ஏய் பாஸ்கர் அப்புறம், நீ உன் இஷ்டத்துக்கு எனக்கு ஸ்கெட்ச் போடுறேன்னு ஒருவாரம் யோசிச்சு, ஒரு மொக்கை பிளானோட வந்து நிற்காத, சரியா! ஒழுங்கா விட்டத எப்படி புடிக்கலாம்னு யோசி, உன்கூட சண்டை போடுற மூடெல்லாம் எனக்கில்லை. ஆக்சுவலா உன் கதையை முடிக்கணும்னு தான் நினைச்சேன். ஆனா ஒரு என்டெர்டெய்ன்மெண்ட் இல்லாம போய்டுமே! அதான் உனக்கு உயிர் பிச்சை போடலாம்னு முடிவு பண்ணிட்டேன். போ, வாழ்ந்துட்டு போ!” என தீரன் கையசைத்தான்.
“உனக்கு இருக்குடா!” என்று வெறியோடு கத்திய பாஸ்கர் அங்கிருந்து வெளியேறினான்.
அப்பொழுது அங்கே வந்த அஷோக் கோபமாக வீர நடையிட்டு செல்லும் பாஸ்கரை பார்த்து புன்னகைத்தபடி அக்னியிடம் வந்து, “அக்னி, நீ யாருன்னு காட்டிட்டடா! அந்த பாஸ்கர் மூஞ்ச பார்க்க சகிக்கல” என்றவன் அக்னியை கட்டி அணைத்துக்கொண்டான்.
“ம்ம்” தீரன் புன்னகையுடன் நின்றிருந்தான். ஆனால் ஒரு வார்த்தை பேசவில்லை. அவனை ஆராய்ந்த அஷோக், “ஆனா இந்த தீரன் புதுசா இருக்கே? பாருடா, சிரிப்பெல்லாம் வருது” என அஷோக், தீரனின் முகத்தை பார்த்தபடி கேட்க, தன் மீசையின் நுனியை மேல் நோக்கி இழுத்து விட்டபடி புன்னகைத்த அக்னி, “சிரிக்கிறதுக்கும் காரணம் வேணும்ல” என்றான்.
“ம்ம், பாருடா! இப்படியெல்லாம் கூட சாருக்கு பேசத் தெரியுமா?” நண்பனை சீண்டினான். பதிலுக்கு அழகாய் சிரித்தான்.
“பாருடா, மறுபடியும் சிரிக்கிற, ம்ம்” இருவரும் துன்பம், வலி, வேதனை, தாங்கள் யார் என்பதை மறந்து, இப்பொழுது சேர்ந்த கல்லூரி மாணவர்கள் போல பேசி சிரித்துக்கொண்டனர்.
“சரி, இந்த திடீர் மாற்றத்துக்கான காரணம் என்னவோ?” புருவம் உயர்த்தினான் அஷோக்.
“மேகாவ கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் அஷோக்” சொல்லும்பொழுதே மணக்கோலத்தில் மேகா கண்முன்னே வந்து போனாள்.
“அப்படிப்போடு, சரியான முடிவுடா! மேகா ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு. நான் இப்போவே சொல்லிட்டேன், நான் என் தங்கச்சி மேகா பக்கம்தான்” அஷோக் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.
“ம்ம்... ம்ம்” கொட்டிச் சிரித்தான். ஏனோ தீரனால் இது போன்ற சீண்டல் பேச்சுகளுக்கெல்லாம் பதில் பேச முடிவதில்லை. சொல்லப்போனால் தெரியவில்லை. அஷோக்கும் தீரனின் கூட்டாளிதான். இருந்தும் இருவருக்கும் இடையே மனிதர்களிடம் பழகும் விஷயங்களில் பெரிய வேற்றுமை எப்பொழுதுமே உண்டு.
என்னதான் துப்பாக்கி பிடித்தாலும் மற்றவர்களிடம் பழகும் விஷயங்களில் அஷோக்கிடம் எப்பொழுதும் சிறு மென்மை இருக்கும். மேலும் தங்கையோடு வளர்ந்தவன் என்பதால் அதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால் தீரனின் வாழ்க்கை பாதையே வேறாயிற்றே! பள்ளிப் பருவம் ஆரம்பித்து அவன் ஓடிய ஓட்டமும், அவன் அடைந்த துன்பமும், துரோகமும், அஷோக் தன் வாழ்க்கையில் சந்தித்தது கிடையாதே!
பனிரெண்டு வயதில் கத்தி, சீர்திருத்த பள்ளியில் வனவாசம், தடம்மாறிய வாழ்க்கை! விளைவு, கல்லூரிக்கு போக வேண்டிய வயதில் பணத்தை நோக்கிச் செல்ல, பெண்களும் காதலும் தீரனுக்கு வெகு தூரமாகிப் போக, இதனாலே அனைவரிடமும் முரட்டுத்தனமாகவே நடப்பவன்.
அஷோக்கை தவிர யாரையுமே நம்பாமல் எப்பொழுதும் இறுக்கமான பாறை போல இருப்பவன். மேகாவின் வருகைக்கு பிறகு, இதுநாள் வரை இருந்த இறுக்கத்தை மொத்தமாக தூக்கிப்போட்டு, ‘இவனுக்கு சிரிக்கவும் தெரியுமா?’ என்று அஷோக்கே ஆச்சரியம் கொள்ளும் அளவிற்கு மேகாவுக்காக சிரிக்கிறான்.
“சரி, மேகாகிட்ட சொல்லிட்டியா?”
“இதோ இப்போ நேரா அவளை பார்க்கத்தான் போறேன். ஷாக் ஆகிடுவாள்ல!” விடலைப்பையன் போல பூரித்தான்.
ஆனால் ஏனோ அஷோக்கால் அக்னிக்காக முழுவதும் மகிழ முடியவில்லை. மனதின் ஓரம், ‘மேகா தீரனை நேசிப்பாளா?’ என ஒருவித நெருடல் துளிர்க்க, நண்பனை பார்த்தான்.
“வீட்டோட இன்டீரியர் டிசைன்ஸ் எல்லாம் அவளுக்கு புடிச்ச மாதிரி மாத்தணும்...” தீரனின் குரலில் ஆர்வம் ததும்பியது. ‘அது செய்ய வேண்டும், இது செய்ய வேண்டும்’ என முகத்தில் சிரிப்பு மாறாமல் பேசிக்கொண்டே இருந்தான்.

அக்னியின் பள்ளிப் பருவத்தில் தொலைந்து போன சிரிப்பை இன்றுதான் அஷோக் பார்க்கிறான். கண்டதையும் பேசி நண்பனின் சந்தோஷத்தை கெடுக்க விரும்பாத அஷோக், என்ன ஆனாலும் மேகாவை அக்னியுடன் சேர்த்து வைத்தே ஆக வேண்டுமென்று உறுதி கொண்டான்.

 
Last edited:

Author: Naemira
Article Title: மிருதன் 10.2
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top