ஆதவன் 13
வழக்கத்தை விட சற்று சீக்கிரமே எழுந்து குளித்து முடித்து ஆயத்தமான வர்ஷாவுக்கு ஏதாவது சாப்பிட வேண்டும் போல் இருந்தது. ஆனாலும் கீழே செல்வதற்கு ஒரு மாதிரி தயக்கமாக இருக்கவும், செல்வோமா வேண்டாமா என்னும் சிந்தனையுடனே கட்டிலில் அமர்ந்திருக்க, அந்நேரம் பார்த்து அறையில் இருந்த இன்டர் காம் சத்தமிடமும் அட்டென்ட் செய்தவள்,
"ஹலோ" என்றாள்.
"ஹலோ மா குட் மார்னிங்" என்று பதில் அளித்த மகாலட்சுமி,
"காஃபி சாப்பிட கீழ வரியா டா இல்ல ஜானகி அக்கா கிட்ட கொடுத்து விடவா" என்று கேட்க,
"இல்ல நானே வரேன், குட் மார்னிங்" என்று இயற்கையாகவே இருக்கும் சிறு பதற்றத்துடன் கூறியவளுக்கு மகாலட்சுமியை எப்படி அழைப்பது என்பதில் பெரும் தயக்கம் இருக்க, வர்ஷாவின் தயக்கத்தை அவளது வார்த்தைகளில் இருந்த திணறலை வைத்தே கண்டறிந்த மகாலட்சுமி,
"சரிடா சீக்கிரமா வா அத்தை கீழே வெயிட் பண்றேன்" என்றவர் மறைமுகமாக அவளது தயக்கத்தை போக்கியிருக்க,
அதை புரிந்து கொண்ட வர்ஷா புன்னகையுடன், "சரி அத்தை இப்ப வந்துடறேன்" என்று கூற, இப்பொழுது மகாலட்சுமியின் இதழ் மெலிதாக புன்னகைத்து கொண்டது.
மகாலட்சுமியின் இந்த அணுகுமுறை வர்ஷாவின் மனதுக்கு இதமளித்திருக்க, தயக்கம் விடுத்து கிச்சனுக்குள் வந்தவளை புன்னகையுடன் வரவேற்ற மகாலட்சுமி அவள் கையில் காபி கப்பை கொடுத்துவிட்டு,
"அக்கா காய் எல்லாம் வெட்டிட்டு சட்னிய மட்டும் அரைச்சிடுங்க" என்று ஜானகிக்கு குரல் கொடுத்தவர் பின்பு வர்ஷாவை பார்த்து,
"அந்த ரக்ல தான் ஸ்நாக்ஸ் எல்லாம் இருக்கு எடுத்து சாப்பிடு" என்றார்.
அவளோ, "இல்லை காஃபி சாப்பிடும் போது ஸ்னாக்ஸ் சாப்பிட மாட்டேன் எனக்கு வேண்டாம்" என்க, "ஓ அப்போ நீ என்னை மாதிரி, ஆனா ஆதிக்கும் அவனோட அப்பாவுக்கும் கண்டிப்பா ஸ்னாக்ஸ் வேணும் அதுவும் காரமா, இப்போ கொஞ்ச மாசமா தான் மார்னிங் ஸ்னாக்ஸ் சாப்பிடுறத குறைச்சிருக்கான்" என்று புன்னகையுடன் அடுப்பில் வைத்த இட்லி வெந்துவிட்டதா என்று பார்த்தபடி கூறினார்.
அவர் புன்னகைக்கவும் பதிலுக்கு வர்ஷாவும் புன்னகைக்க, அந்நேரம், "ஏய் ஜானகி காஃபி கப்ப எடுத்துட்டு எங்க போற?" என்று கேட்டபடி உள்ளே வந்த வேதவள்ளி புன்னகையுடன் காஃபியை குடித்துக் கொண்டிருந்த வர்ஷாவை ஒரு பார்வை பார்க்க, அவரது பார்வையில் காஃபி குடிப்பதை நிறுத்திய பெண்ணவளோ மிரட்சியுடன் அவரைப் பார்த்தாள்.
அப்பொழுது, "ஆதித் தம்பிக்கு மா" என்று தனக்கு பதில் அளித்த ஜானகியிடம்,
"கப்ப அவகிட்ட கொடு" என்று வர்ஷாவை கை காட்டி கூறியவர், "அதான் பொண்டாட்டி வந்துட்டால்ல இதெல்லாம் அவ பண்ணுவா" என்றார்.
வேதவள்ளியின் அதட்டலில் மிரட்சியுடன் நின்றிருந்த வர்ஷாவை கண்ட மகாலட்சுமி அவளை இயல்பாக்கும் பொருட்டு,
"ஆதி பின்னாடி ஜாகிங் இல்லைன்னா ஸ்விம்மிங் பண்ணிட்டு இருப்பான் நீ காஃபி குடிச்சிட்டு இத அவனுக்கு கொண்டு போய் கொடு" என்று தன்மையாக சொல்ல, "இவ குடிச்சு முடிக்கிற வரைக்கும் அவன் காத்து இருக்கணுமா என்ன?" என்று மருமகளை முறைத்தபடி கூறியவர் பின்பு வர்ஷாவை பார்த்து,
"உன் காஃபியையும் கையோட எடுத்துட்டு போ, அவன் கூட உட்கார்ந்து குடி, காலையிலேயே இங்க வந்து பல்ல காட்டிட்டு இருக்க, அவன் கூட இருந்து அவனுக்கு என்ன வேணுமோ பார்த்து பண்ணு, இன்னைக்கு மட்டும் இல்ல இனி எப்பவும் அவனுக்குரிய காரியத்தை நீ தான் பார்த்துகிற சரியா, தினமும் சொல்ற மாதிரி வச்சுக்காத" என்று கட்டளையாக கூற, சரி என்பதாய் தலையசைத்த வர்ஷா ஆதித்தை தேடி சென்றாள்.
வர்ஷா செல்லும் வரை அமைதியாக இருந்த வேதவள்ளி அவள் சென்றதும் தன் மருமகளிடம் வந்தவர்,
"இதெல்லாம் நீ சொல்ல மாட்டியா மகா, ஏற்கனவே அவங்க கல்யாண வாழ்க்கை அந்தரத்துல தொங்குது, இதுல உன்கிட்டயே அவளை வச்சுக்கோ ரொம்ப நல்லா இருக்கும். அவனுக்குரிய காரியத்தை அவள செய்ய வை அப்பதான் ரெண்டு பேருக்கு நடுவுலயும் அன்னியோன்யம் வரும். அப்புறம் ஜோசியரை பார்த்துட்டு வரும்போது அந்த பொண்ணோட அப்பா அம்மாவையும் பார்த்துட்டு வாங்க, பொண்ண குடுத்துட்டு எதுவும் பேசாம இருந்தா எப்படி? அவங்களுக்குன்னு சில முறை இருக்குல்ல, எல்லாம் நான் தான் உனக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதா இருக்கு. " என்று சலிப்புடன் கூறினார்.
எங்கே ஊர்மிளாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு வர்ஷாவை எதுவும் குத்தலாக பேசுவாரோ என்று எண்ணி பயந்த மகாலட்சுமிக்கு வேதவள்ளியின் பேச்சு நிம்மதியை கொடுக்க,
"சரி அத்தை நீங்க என்ன சொல்றீங்களோ அப்படியே பண்ணிடுறேன்" என்றார் மகாலட்சுமி.
@@@@@@@@@@@@
டிரேயுடன் வெளியே வந்த வர்ஷாவின் கண்களில், நீச்சல் குளத்திலிருந்து இருந்து நீர் சொட்ட சொட்ட வெளியே வந்த ஆதித் தென்பட்டான். அவளோ அவன் அருகில் செல்லவா வேண்டாமா என்னும் தீவிர யோசனையில் இருக்க, வர்ஷாவை அங்கிருந்தே கண்டு கொண்ட ஆதித் டவலினால் தன் ஈரமான சிகையை மட்டும் லேசாக துவட்டி விட்டு டவளை தன் மேலே போட்டபடி அவளை நோக்கி நடந்து வந்தவனுக்கு அவள் கையில் இருந்த ட்ரேயை பார்த்ததுமே அவள் ஏன் வந்திருக்கிறாள் என்பது புரிய, அவள் அருகே வந்தவன்,
"தேங்க்யூ" என்றபடி காஃபி கப்பை எடுத்துக்கொண்டு திரும்பி நடந்தான்.
அப்பொழுது, "சார் கொஞ்சம் பேசணும்" என்ற அவளது குரலில் திரும்பி அவளைப் பார்த்தவன், "ம் சொல்லு" காபியை அருந்தியபடி கூறினான்.
அவளோ சிறு தயக்கத்துடன் அவனைப் பார்த்து, "இன்னையோட லீவ் முடிஞ்சது நாளைல இருந்து வேலையில ஜாயின் பண்ணனும் போகவா" என்று கண்களை சுருக்கி படி கேட்க, அவள் கேட்ட விதமும் அவள் விழிகளில் தெரிந்த ஒரு வித அப்பாவி தன்மையும் வழக்கம் போல அவனை ஈர்க்க, காஃபியை அருந்தியப்படியே அவளைப் பார்த்தான்.
காலை வெயிலின் தாக்கத்தால் அவளது நுதலில் அரும்பி இருந்த வியர்வைத் துளிகள் வடிந்து அவளின் நெற்றியில் இருந்த குங்குமத்துடன் கலந்து அப்படியே சிறு துளியாய் உருண்டு வர, அனிச்சையாக அதைத் துடைக்க எழுந்த தன் கரத்தை மிகச் சிரமப்பட்டு அடக்கியவன், 'நீ சரியே இல்ல ஆதி, ஏண்டா இப்படி மாறிட்ட? நேத்து நைட்டு தானடா இவளை விட்டு விலகி இருக்கணும்னு முடிவு பண்ண, முழுசா ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள என்ன பண்ணிட்டு இருக்க நீ' என்று தன் மனதிற்குள் தன்னைத்தானே திட்டிக் கொண்டவன், தனது பதிலை எதிர்பார்த்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த வர்ஷாவை ஒரு கணம் பார்த்துவிட்டு,
"தாராளமா போ ஆனா இந்த வீக் வேண்டாம், எங்க வீட்ல ரிசப்ஷனுக்கு பிளான் பண்றாங்க, அனேகமா இந்த வீக் இருக்கும் நீ நெக்ஸ்ட் வீக்ல இருந்து வேலைக்கு போ. நான் மீரா கிட்ட பேசிக்கிறேன்? என்று அவளது முகத்தை கூட பார்க்காது கூறியவன் திரும்பி நடக்க ஆரம்பிக்க, அப்பொழுது மீண்டும் கேட்ட,
"ஒரு நிமிஷம்" என்ற அவளது குரலில் சட்டென்று நின்றவன்,
'நாம விலகினாலும் இவ விட மாட்டா போலயே' என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டான்.
பின்பு, 'என்ன ஆனாலும் அவ கண்ண மட்டும் பார்க்க கூடாது, அதுதான் நம்மள ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது' என்று மனதிற்குள் உறுதி எடுத்தபடி திரும்பி அவளைப் பார்க்க, அவளோ மகிழ்ச்சியுடன் அவனுக்கு நன்றி கூறியவள் மீண்டும் ஒருவித தயக்கத்துடன் அவனைப் பார்த்து,
"உங்க கிட்ட மட்டும் தான் கேட்டேன் வீட்ல மத்தவங்க கிட்ட கேட்கல இப்ப என்ன பண்றது" என்று வழமை போல விழிகளை சுருக்கி கேட்க, 'பாக்காத பாக்காத' என்று பார்க்கத் துடித்த தன் மனதை மிகவும் சிரமப்பட்டு கட்டுப்படுத்திய ஆதித்,
"அதெல்லாம் எந்த பிரச்சினையும் இல்ல நான் பார்த்துக்கிறேன்." என்றவன் காஃபியை அருந்தியபடி அவள் பதிலை கூட கேட்காது வேகமாக அங்கிருந்து சென்றுவிட, எங்கே தனது வேலை விடயம் வீட்டில் பெரிய பிரச்சனையை உண்டாக்குமோ என்று எண்ணி பயந்து கொண்டிருந்த வர்ஷாவுக்கு ஆதித் எல்லாவற்றையும் தான் பார்த்துக் கொள்வதாக சொன்னது நிம்மதியை கொடுத்தது.
@@@@@@
வர்ஷாவுக்கு அன்று காலை துவங்கி மதியானம் வரை அனைத்துமே நன்றாக தான் போய்க் கொண்டிருந்தது.
நண்பகல் ஒரு மணிக்கெல்லாம் அனைவரும் உணவை முடித்திருக்க, சத்யபாலன் தன் நண்பரை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றுவிட, வேதவள்ளியும் வழமை போல மாத்திரை போட்டுவிட்டு ஓய்வு எடுப்பதற்காக தன் அறைக்கு சென்றுவிட்டார்.
பின்பு மகாலட்சுமியும் தேவராஜும் ஜோசியரை காண்பதற்காக வர்ஷாவிடம் சொல்லிவிட்டு வெளியேறி விட, கொஞ்சம் நேரம் ஹாலில் அமர்ந்து பேப்பர் பார்த்து கொண்டிருந்த வர்ஷா பின்பு தனியாக ஹாலில் இருக்க விரும்பாமல் சற்று ஓய்வு எடுக்கலாம் என்று தன் அறைக்கு வந்தவள் சோர்வின் காரணமாக அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தபடியே உறங்கிவிட, அவள் எழுந்தது என்னவோ முகத்தில் ஊற்றப்பட்ட நீரினால் தான். முகத்தில் நீர் பட்டதும்,
"ஆ" என்று கத்தியபடி வெடுக்கென்று எழுந்து அமர்ந்த வர்ஷா, தன் முன்னே அதீத ஆத்திரத்தில் கண்கள் சிவக்க நின்றிருந்த, அவளுக்கு சற்றும் பரிச்சயம் ஆகாத வருணிகாவை பயத்துடன் பார்க்க, கையில் பாட்டிலுடன் நின்றிருந்த வர்ணிகாவோ வர்ஷாவை பார்த்து அதிகார தோரணையுடன்,
"எழுந்திருடி" என்றவள் தன் கையில் இருந்த காலி பாட்டிலை சுவற்றில் தூக்கி எறிந்து விட்டு வர்ஷாவிடம்,
"உனக்கு இங்க என்னடி வேலை முதல்ல வெளியே போ" என்று சத்தமாக சொல்ல வருணிகாவின் சீற்றத்தில் வர்ஷா பதறி விட்டாள்.
அப்பொழுது வருணிகா, இன்னும் எழுந்துகொள்ளாமல் அமர்ந்திருந்த வர்ஷாவை பார்த்து,
"நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ உக்காந்துக்கிட்டே இருக்க, எந்திரிடி" என்ற படி அவளது கரத்தை அழுத்தி பிடித்து இழுக்க, "வலிக்குதுங்க" என்று வர்ஷா கத்திவிட்டாள்.
ஆனால் அவள் கத்தியதை காதில் வாங்காத வருணிகாவோ,
"நான் இருக்க வேண்டிய இடத்துல நீ எப்படி இருக்கலாம்? இது என்னோட ரூம், ஆதிக்கும் எனக்குமான ரூம் இங்க நீ இருக்க கூடாது" என்று பயங்கரமாக சத்தமிட வர்ஷாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, ஒருவித பதற்றத்தில் நின்றிருந்தவள் வருணிக்காவை பார்த்து,
"என்னாச்சி ஏதும் பிரச்சனையா? நீங்க யாரு? என்று கேட்க, வருணிகா கொந்தளித்து விட்டாள்.
"நான் யாரா! என்னையா யாருன்னு கேக்குற ஹான்" என்று சீரியவள், ஆதித்தின் வாழ்க்கையில் தனக்கு இருந்த உரிமையை வர்ஷாவிடம் தெரிவிக்கும் பொருட்டு தனது அலைபேசி எடுத்து தானும் ஆதித்தும் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை காட்ட வர்ஷா தான் சங்கடப்பட்டு போனாள். ஆனால் அதை எதையுமே பொருட்படுத்தாத வர்ணிகாவோ கபோர்டை திறந்து அதில் இருக்கும் தனது உடைமைகளையும் சில பொருட்களையும் வர்ஷாவிடம் எடுத்துக்காட்டி,
"எல்லாம் என் ஆதி எனக்கு வாங்கி கொடுத்தது, நல்லா பாரு மொத்த ரூமையும் பாரு, அந்த டேபிளை பாரு அதுல ஆதி கூட யார் இருக்கா நான் இருக்கேன்.
ஆசை ஆசையாய் எத்தனை கனவோட இந்த ரூம நான் ரனோவ்ட் பண்ணினேன் தெரியுமா, ஆனா நீ என் வாழ்க்கையையே கெடுத்துட்டு, என்னை யாருன்னு வேற கேட்கிற" என்று பல்லை கடித்த வருணிக்கா வர்ஷாவை பார்த்து,
"நல்லா கேட்டுக்கோ நான் தான் அவனோட பொண்டாட்டி, அவன் உன் கழுத்தில் தாலி கட்டிடான் என்கிறதுக்காக நீ ஒன்னும் அவன் பொண்டாட்டி ஆகிட முடியாது, அதுக்கு நான் விடவும் மாட்டேன், உனக்கெல்லாம் இங்க இருக்கவே தகுதி இல்ல, முதல்ல வீட்டை விட்டு வெளியே போ" என்றவள் வர்ஷாவின் கரத்தைப் பற்றிக் கொண்டு தர தரவென இழுத்து வந்து வீட்டிற்கு வெளியே பிடித்து தள்ள, அவமானத்தில் வர்ஷாவுக்கு கண்கள் இரண்டும் கலங்கி தேகமெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
இதற்கிடையில் சத்தம் கேட்டு ஓடி வந்த வேலையாட்கள் அனைவரும் வர்ஷாவை பரிதாபமாக பார்க்க, ஓடிச்சென்ற ஜானகி வேதவள்ளியை அழைத்து வந்தவர் கொஞ்சமும் தாமதிக்காமல் மகாலட்சுமிக்கு அழைத்து விடயத்தை கூறினார்.
அடுத்த அத்தியாயம் படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
ஆதவன் 14
Last edited:
Author: Naemira
Article Title: ஆதவன் 13
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ஆதவன் 13
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.