ஆதவன் 14
"வருணிக்கா என்னதாங்க நினைச்சுட்டு இருக்கா? ஏன் அந்த பொண்ணு இப்படியெல்லாம் நடந்துக்குறா? ஆயிரம் இருந்தாலும் வர்ஷா நம்ம வீட்டுக்கு வாழ வந்த பொண்ணுங்க இதெல்லாம் நல்லாவா இருக்கு" என்று கணவரிடம் கோபமாக முறையிட்ட மகாலட்சுமிக்கு ஜானகி மூலமாக விடயத்தை கேள்விப்பட்டதிலிருந்து தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
"சரி நீ கொஞ்சம் பொறுமையா இரு, பாத்துக்கலாம், முதல்ல இந்த தண்ணிய குடி" என்ற தேவராஜ் காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை நீட்ட, அதை வாங்கி பருகியவருக்கு வருணிக்கா மீது கொண்ட கோபம் மட்டும் கொஞ்சமும் குறையவில்லை.
இதற்கிடையில் ஊர்மிளாவுக்கு அழைத்து நன்கு திட்டிய தேவராஜ் அவரை உடனே வரும்படி கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவர் மனைவியிடம்,
"நீ கவலைப்படாத ஊர்மிளாக்கு பேசிட்டேன், அவ வந்து எல்லாத்தையும் பாத்துக்குவா. ஆதிக்கு எதுவும் சொல்லாத" என்று சொல்லவும் மகாலட்சுமி அவரை முறைத்து பார்க்க,
"புரிஞ்சுக்க மஹா, ஆஃபிஸ்ல வச்சு மாப்பிளை பேசினாரு கொஞ்ச நாளா வரு வீட்ல ரொம்ப பிரச்சனை பண்ணுவா போல, ஊர்மி வேற அழுதுட்டே இருக்காளாம், நேத்து அம்மாவும் சொல்லி வருத்தப்பட்டாங்க, இப்போ இந்த விஷயம் ஆதிக்கு தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவான், கோபத்துல வருணிக்காக்கிட்ட ஏதும் ரியாக்ட் பண்ணிட்டா பெரியவங்களுக்குள்ள தான் பிரச்சனை வரும். ரிசெப்ஷன் பிளான் பண்ணிட்டு இருக்கும் பொழுது தேவையில்லாத சண்டை எதுக்கு? நாமளே இதை சரி பண்ணிடுவோமே" என்று தேவராஜ் நிலைமையை எடுத்து சொல்ல,
"என்னவோ பண்ணுங்க ஆனா நான் கண்டிப்பா பொறுமையா இருக்க மாட்டேன்" என்று மூச்சு வாங்க கூறிய மனைவியிடம்,
"அதைத்தான் நானும் சொல்றேன், நீ என்னவும் பேசலாம் ஆனா ஆதி இதுல பேசினா வேற மாதிரி போக சான்ஸ் இருக்கு முதல்ல பிரச்சனைய நாம சால்வ் பண்ணிக்குவோம், அதுக்கப்புறம் அவன் கிட்ட சொல்லிடலாம்" என்ற தேவராஜ் வேகமாக வீட்டை நோக்கி காரை செலுத்தினார்.
@@@@@@
"வருமா என்ன பண்ணிட்டு இருக்க நீ, முதல்ல அந்த பொண்ண உள்ள விடு, எதுவா இருந்தாலும் பேசிக்கலாம் பாட்டி சொல்றத கேளு" என்ற வேதவள்ளியை தன் பார்வையாலே அடக்கிய வருணிக்கா,
"என்கிட்ட என்ன சொன்னீங்க? எப்படியாவது பேசி ஆதிய எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன்னு சொல்லிட்டு, இப்போ அவங்க ரெண்டு பேருக்கும் ஆசிர்வாதம் பண்ணி இருக்கீங்க. இனிமே நான் யார் பேச்சையும் கேட்கிறதா இல்ல. எனக்கு வேண்டியத நானே பண்ணிக்கிறேன்" என்றாள் காட்டமாக.
பின்பு திரும்பி வர்ஷாவை பார்த்தவள், "உன்ன போகச் சொல்லி எவ்வளவு நேரம் ஆகுது" என்று சீரியபடி அவளை நோக்கி வர,
அப்பொழுது,
"உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு வரு? இங்க வந்து என்ன பண்ணிட்டு இருக்க?" என்று கேட்டபடி வந்த ஊர்மிளாவை தொடர்ந்து மகாலட்சுமி மற்றும் தேவராஜும் அங்கே வந்துவிட, வந்தவர்கள் அனைவரும் தன்னை குற்றம் சுமத்துவது போல பார்க்கவும் எரிச்சலில் வருணிக்கா பல்லை கடித்தாள்.
அந்நேரம் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு உதடு துடிக்க நின்றிருந்த வர்ஷாவை பார்த்த மகாலட்சுமிக்கு பொறுமை எல்லாம் எங்கோ சென்றிருக்க,
"என் மருமகளை எப்படி நீ வெளியே நிற்க விடலாம், என்ன நினைச்சுட்டு இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்க ஹான்" என்று மகாலட்சுமி வருணிகாவை பார்த்து ஆக்ரோஷமாக வினவினார்.
அதை கேட்டு சத்தமாக சிரித்த வருணிக்கா, "யார் மருமக? இவ உங்களுக்கு மருமகளா!? இவ மருமகன்னா நான் யாரு? நானும் ஆதியும் பிரிஞ்சதுக்கு காரணமே இவதான், இவள பத்தி தெரிஞ்சும் நடு வீட்ல உட்கார வச்சு இருக்கீங்க. என்ன நினைச்சிட்டு நீங்க இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க?" என்று பதிலுக்கு இரு மடங்கு ஆக்ரோஷத்துடன் மகாலட்சுமியை பார்த்து கேட்ட வருணிகா, அப்படியே வர்ஷாவை பார்த்து,
"இவ்வளவு சொல்லியும் கிளம்பாம அழுதுட்டு சீன் போட்டுட்டு இருக்க, உனக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்? உன்னை" என்று பற்களை கடித்த படி சீறிய வருணிக்கா யாரும் சற்றும் எதிர்பார்ப்பதற்குள் வர்ஷாவை நோக்கி கரத்தை உயர்த்தி விட, அடுத்த நொடி ஓங்கிய வருணிக்காவின் கரத்தை பிடித்துக்கொண்ட ஆதி அவளை பார்த்து,
"தொலைச்சிடுவேன்" என்று தன் ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தவன், சொடக்கிட்டபடி தனது ஆல்காட்டி விரலை வாசலை நோக்கி காட்டி,
"கெட் அவுட் வெளிய போடி" என்று சொல்லியபடி அனல் தெறிக்க பார்க்க அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
திருமணத்தன்று பார்த்தது அதன் பிறகு இருவரும் இன்று தான் சந்திக்கிறார்கள்.
அவன் வெளிய போக சொன்னது அவமானமாக இருந்தாலும், அதற்காக அவள் கோபமெல்லாம் படவில்லை, இப்பொழுது இருக்கும் நிலைமையில் அவன் கிடைத்தால் போதும் என்று எண்ணியவளின் விழிகளில் ஒருவித எதிர்பார்ப்பு!
ஆனால் அவன் விழிகளிலோ வெறுப்பு! இதுவரை காதலோடு மட்டும் சந்தித்துக்கொண்ட இருவரது விழிகளும் முதன்முறை முரணாக சந்தித்துக் கொள்ள, ஒரு நொடிக்கும் குறைவாக அவளை எச்சரிக்கும் நோக்கில் பார்த்தவன் அடுத்த நொடி வர்ஷாவை தான் பார்த்தான்.
உடலும் தலையும் பாதி நனைந்த நிலையில் உதடு துடிக்க அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு பரிதாபமாக நின்றிருந்தாள்.
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆடிஷன் விரைவாகவே முடிந்து விட்டதால் வழக்கத்தை விட நேரமே வந்திருந்தவனுக்கு என்ன நடந்தது என்று முழுவதுமாக கணிக்க முடியவில்லை, உள்ளே நுழையும் நேரம் வருணிக்கா வர்ஷாவை அடிப்பதற்காக கை ஓங்கியதை பார்த்தவன், வேகமாக வந்து அவளை தடுத்திருக்க, இப்பொழுது வர்ஷாவின் கோலத்தை பார்த்த பிறகே பிரச்சனை பெரியது என்று புரிந்து கொண்ட ஆதித் வர்ஷாவை பார்த்து,
"என்ன நடந்தது?" என்று வினவினான்.
அவனது குரலை கேட்டதும் நிமிர்ந்து அவனைப் பார்த்துவிட்டு, மூச்சு வாங்க தன்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் வருணிக்காவை பார்த்தவள் கண்ணீரை துடைத்துவிட்டு எதுவும் பேசாமல் அமைதியாக நின்று விட, அதை கவனித்த ஆதித்துக்கு சுர்ரென்று ஏறியது.
"நான் உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன், அங்க என்ன பார்வை?" அவனது சூடான மூச்சுக்காற்று அவளது முகத்தில் படும் நெருக்கத்தில் நின்றபடி அவன் அதட்டவும், அவள் உடலில் ஒரு அதிர்வு, அதைப் பார்த்த ஆதித்தோ எரிச்சலுடன் நெற்றியை நீவியவன் இப்பொழுது தன் தாயை பார்த்தான்.
வருணிக்கா வர்ஷாவை அடிக்க வந்தது, எதிர்பாராத நேரத்தில் ஆதித்தை இங்க கண்டது என அனைத்தும் சேர்த்து அதிர்ச்சியில் நின்றிருந்த மகாலட்சுமி மகனின் பார்வையில் தன்னை நிதானப்படுத்திக்கொண்டவர்,
"ஒன்னும் இல்லடா நீ முதல்ல வர்ஷாவை கூட்டிட்டு ரூம்க்கு போ" நிலைமையை சரி செய்யும் பொருட்டு அவ்வாறு கூற அவரை விரக்தியாக பார்த்த ஆதித், வர்ஷாவின் கரத்தை பற்றி அவர் முன்பு நிப்பாட்டி,
"இவ இப்படி நிக்கிறது உங்களுக்கு ஒன்னும் இல்லையாம்மா" என்று நிதானமாய் கேட்டவன் அனைவரையும் ஒரு பார்வை பார்க்க, மகாலட்சுமி உட்பட யாராலும் எதுவுமே பேச முடியவில்லை, அவனிடம் இருந்த நியாயம் அனைவரையும் வாயடைக்க செய்திருந்தது.
அனைவரின் மௌனமும் ஆதித்தின் கோபத்தை மேலும் தூண்டி விட,
"எல்லாருமே இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? என்னதான் நடந்தது எனக்கு இப்ப முழுசா தெரிஞ்சாகணும்" என்று ஆக்ரோஷமாக கேட்க,
"தம்பி" என்றபடி தயக்கத்துடன் அவன் முன்னே வந்த ஜானகி,
"அம்மா, ஐயா யாருக்குமே தெரியாது தம்பி எல்லாருமே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தாங்க எனக்குமே முழுசா எல்லாம் எதுவும் தெரியாது" என்றவர் தன் காதால் கேட்டதையும் கண்ணால் பார்த்ததையும் மட்டும் சொல்ல ஆதித்தின் தாடை இறுகியது.
அழுத்தமாக வருணிக்காவை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட, "இது தேவையா?" என்று தன் மகளை திட்டிய ஊர்மிளா அழுகையுடன் தன் தமையனை பார்த்து,
"என்ன அண்ணா இது உன் புள்ள வெளியே போங்கன்னு சொல்லிட்டு போறான், நீ எதுவும் பேசாம அமைதியா நிக்கிற" என்று கேட்க,
"திருத்திக்கோ அவன் வருணிக்காவை தான் சொன்னான் உன்னை இல்லை, அப்புறம் உன் புள்ள வர்ஷா கிட்ட நடந்து கிட்டது தப்பில்லை அதுக்கு ஆதி திட்டுனது மட்டும் தப்பு, நல்லா இருக்கு ஊர்மி. நீ இப்படி உன் பொண்ணை கண்டுக்காம விட்டதால தான் இவ இந்தளவுக்கு பண்ணிட்டு இருக்கா. இங்க பாரு ஊர்மி ஏற்கனவே நா உன்கிட்ட சொன்னது தான், ஒழுங்கா வருணிக்காவுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கிற வழிய பாரு, மறுபடியும் இப்படியே ஏதாவது பண்ணிக்கிட்டு இருந்தா, இது போல நான் பொறுமையா பேசிட்டு இருக்க மாட்டேன்" என்று தேவராஜ் ஊர்மிளாவிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, பெரிய இரும்பு பாத்திரத்துடன் வெளியே வந்த ஆதி அதை அப்படியே தரையில் போட்டவன், வருணிக்காவை அழுத்தமாக பார்த்தபடி,
"அக்கா எல்லாத்தையும் இதுல போடுங்க" என்று ஜானகியிடம் சொல்ல, "சரிங்க தம்பி" என்றவர் அவன் சொன்னது போல வருணிகாவின் ஞாபகமாய் அவனது அறையில் இருந்த புகைப்படங்கள், அவளது உடைமைகள், பரிமாறப்பட்ட பரிசு பொருட்கள் என அனைத்தையும் அதில் போட, வருணிக்காவை பார்த்தபடியே கேரோசினை எடுத்து ஊற்றியவன் தீப்பெட்டியை எடுத்து அதை பற்றவும் வைத்துவிட, கொஞ்சம் கொஞ்சமாய் ஆக்கிரமித்த நெருப்பு இப்பொழுது மொத்தமாக பற்றி கொண்டு எரிய ஆரம்பிக்க, திருப்தியாக அதைப் பார்த்த ஆதித் அப்படியே திரும்பி வருணிக்காவை பார்த்தபடி வர்ஷாவின் விரல்களோடு தன் விரல்களை இறுக்கமாக பிணைத்துக் கொண்டவன் ஒரு கணம் நின்று ஜானகியை பார்த்து,
"எரிஞ்சி முடிஞ்சதும் இது எல்லாத்தையும் குப்பையில போடுங்க" என்று கூறிவிட்டு வருணிக்காவை தாண்டி வர்ஷாவுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.
சாம்பலாகி கொண்டிருந்த ஒவ்வொரு பொருட்களின் நினைவுகளும் பெண்ணவளின் இதயத்தை தனலாய் சுட, தன் கண் முன்னே எரிந்து கொண்டிருக்கும் அத்தனை பொருட்களையும் இமை தட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த தன் மகளின் கரத்தை பற்றிய ஊர்மிளா, "வா போலாம்" என்று அழைத்து செல்ல, மறுப்பு ஏதும் சொல்லாமல் எரியும் நெருப்பை தன் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டே சென்றாள் வருணிக்கா.
@@@@@@@
வீட்டில் இருந்த அனைவருமே வருணிக்காவின் செயலை எண்ணி கோபத்தில் இருக்க, அதேநேரம் வர்ணிகாவின் செயலுக்கான அடிப்படை காரணத்தை எண்ணிப் பார்த்த வர்ஷா மட்டும் அவளுக்காக மனதார வருந்தினாள்.
ஆதித்தும் வருணிக்காவும் பிரிவதற்கு காரணமான தன் தங்கையை எண்ணி மிகவும் வேதனைப்பட்டவள்,
"உன்னால இப்போ எத்தனை பேர் கஷ்டப்படுறாங்க தெரியுமா? ஏண்டி இப்படி பண்ணின?" என்று வாய்விட்டு கூறியவளின் மனம் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்க, இப்பொழுது அவளது சிந்தனையை ஆட்கொண்டது என்னவோ ப்ரஜனின் நினைவுகள் தான், 'இத்தனை நாட்கள் ஆகிவிட்டது அவனிடம் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லையே' என்று எண்ணிய வர்ஷாவுக்கு குற்ற உணர்வில் மனம் தத்தளிக்க,
"சாரி பிரஜன் என்னை மன்னிச்சிடுங்க" என்றவள், திடீரென்று நினைவு வந்தவளாக குனிந்து தன் கால்களை பார்த்தாள்.
நிச்சயதார்த்தம் அன்று ப்ரஜன் அவன் கரங்களாலே அணிவித்து விட்ட கொலுசுகள் இன்னும் அவள் கால்களில் சிணுங்கிக் கொண்டிருந்தது, அன்று பிடித்திருந்தது, ஆனால் இன்று அதை பார்க்கும் போது ஏனோ உறுத்த,
"சீக்கிரம் அவரை பார்த்து இத அவர் கிட்ட கொடுத்து மன்னிப்பு கேட்கணும்" என்று மனதில் குறித்து கொண்டவள் வேகமாக கொலுசை கழட்டும் முயற்சியில் இறங்கினாள்.
"சாரி மா கோபத்துல உன்கிட்ட ஒரு மாதிரி பேசிட்டேன்" தனக்கு உணவை பரிமாறிக் கொண்டிருந்த தன் அன்னையை பார்த்து வருத்தத்துடன் கூறினான் ஆதித்.
அதைக் கேட்ட மகாலட்சுமி புன்னகையுடன், "இப்படித்தான் இருக்கணும், நம்பி வந்த பொண்ண என்னைக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது" என்று கூறி மகனின் தலையை கலைத்துவிட்டவர்,
"இப்ப வர்ஷா எப்படி இருக்கா?" என்று கேட்டார்.
அதற்கு ஆதித், "நான் எதுவும் பேசலமா, அவ கொஞ்ச நேரம் தனியா இருக்கட்டும்ன்னு விட்டுட்டு வந்துட்டேன்" என்றான்.
அதன் பிறகு ஆதித் தன் உணவை முடித்துக் கொண்டதும் அவனிடம் உணவு அடங்கிய தட்டை கொடுத்த மகாலட்சுமி, "வர்ஷாவை டிஸ்டர்ப் பண்ண வேணாம் இன்னைக்கு ரூம்லயே வச்சு சாப்டட்டும். தட்ட மட்டும் ரூம்க்கு வெளியே வச்சிடு, காலைல எடுத்துக்கலாம்" என்று சொல்ல,
"நானுமே அதான் நினைச்சேன்" என்ற ஆதித் தனது அன்னைக்கு குட் நைட் சொல்லி விட்டு தன் அறைக்கு திரும்பினான்.
@@@@@@@@
கதவை தட்டி விட்டு உள்ளே வந்த ஆதித் உணவு தட்டை டேபிளில் வைத்துவிட்டு, தீவிர முக பாவத்துடன் கொலுசை கடித்த படி அதனுடன் போராடிக் கொண்டிருந்த வர்ஷாவை பார்த்து,
"அழகா தானே இருக்கு அதை ஏன் கழட்டிட்டு இருக்க" என்று கேட்க்க
அவனை நிமிர்ந்து பார்த்த வர்ஷா,
"முதல்ல அழகா இருந்துச்சி ஆனா இப்போ ஏனோ உறுத்திடே இருக்கு அதான் ரொம்ப நேரமா கலட்ட முயற்சி பண்றேன் பட் முடியல" என்றவள் மீண்டும் அதனுடன் போராட துவங்க சில நொடிகள் அவளை பார்த்துக் கொண்டிருந்த ஆதித் திடிரென்று என்ன நினைத்தானோ சட்டென்று வர்ஷாவுக்கு முன்னால் வந்து அமர்ந்து, அவளது இதழ்களுக்குள் இடையே சிக்கிக் கொண்டிருந்த கொலுசை விடுவித்தவன் அவள் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே பாதத்தையும் பற்றிக்கொள்ள பெண்ணவளோ பதறிப் போனாள்.
"என்ன பண்றீங்க நீங்க?" என்று பதற்றத்துடன் தனது பாதத்தை வர்ஷா தன்னை நோக்கி பின்னால் இழுக்க பார்க்கவும் ஆதித் அதை இன்னும் இறுக்கமாக பற்றிக்கொள்ள, "அது வந்து" என்று ஏதோ பேச வந்த வர்ஷாவின் இதழ் மேல் "ஷ்" என்றபடி தனது ஆள்காட்டி விரலை வைத்து அவளைப் பேச விடாமல் தடுத்த ஆதித்,
"ரொம்ப டைட்டா தான் இருக்கு" கொலுசை கழட்ட முயற்சித்தபடி கூறினான்.
அதைக் கேட்ட அவளும், "ஆ.. மா" என்று சொல்லி முடிப்பதற்குள், "வேற வழியே இல்லை" என்றவன் சட்டென்று குனிந்து தனது பற்களால் கொலுசை கழட்ட ஆரம்பிக்க, அப்பொழுது அவளது காலில் அவனது மீசை ஏற்படுத்திய குறுகுறுப்பில் தேகம் தளிர்த்த பெண்ணவளுக்கு வார்த்தைகள் எல்லாம் மறந்து போக, உணர்ச்சி குவியலுக்குள் சிக்கி தவித்தாள்.
ஆனால் இது எதையுமே அறிந்திடாத ஆணவனோ காரியமே கண் என்பது போல பெண்ணவளை மேலும் சில நொடிகள் இம்சித்த பிறகு,
"சக்ஸஸ், முடிச்சிட்டேன் இனிமே இத போடாத உனக்கு கம்ஃபர்டபிலா இருக்குற மாதிரி வேற பார்த்து வாங்கிக்கலாம்" என்றவன் அவளது கரங்களில் இரண்டு கொலுசுகளையும் புன்னகையுடன் கொடுக்க, சரி என்பதாய் சிறு தலையசைப்புடன் அதை வாங்கி கொண்ட வர்ஷாவின் இதழ்களும் மென்மையாய் புன்னகைத்துக் கொண்டது.
அடுத்த அத்தியாயம் படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
ஆதவன் 15
Last edited:
Author: Naemira
Article Title: ஆதவன் 14
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ஆதவன் 14
Source URL: Naemira Novels-https://naemiranovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.